Saturday, April 23, 2011

சித்திரை திருவிழா..

இப்ப எல்லா நம்ப கனகுக்கு புடிச்ச பாட்டு "ஒத்த சொல்லால என் நெஞ்ச..." பூளைமேடு பள்ளிக்கூடத்துக்கு போற 74 பஸ்ல வர பிரியா இதுக்கு காரணம். போன ஆறு மாசமா முயற்சி பண்ணி ஜெயிச்சிப்புட்டான் நம்ப hero.. வெள்ளனூர்ல இருந்து பூளைமேடு வரைக்கும் போற வரைக்கும் நம்ப பய பண்ணாத அலும்பு அட்டூழியம் இல்ல, தொங்கல்ல வாறது, ஒவ்வொரு stopலயும் எறங்கி, ஓடற பஸ்ல ஏற்றது இப்டி எல்லா செஞ்சு புள்ளைய கவுத்துபுட்டான். பசங்கா தா பொல்லாப்புனா புள்ளைங்க அதுக்கும் மேல. ஆறு மாசமா சாட காட்டி வந்தவ கடைசி பரீட்சை அன்னிக்கு சொல்லிச்சு "உன எனக்கு புடிச்சுஇருக்கு"
றெக்க மொளைக்காத கொற நம்ம தொரைக்கு, பள்ளிக்கூடம் இல்லாட்டியும் காலைல 9 மணிக்கு கெளம்பியாச்சு. ஹீரோ சைக்கிள்ல கெளம்பின நம்ம ஹீரோ ஊற வலம் வருவாரு. அன்னிக்கும் இன்னிக்குமா ரெண்டு ஒருதடவ பாத்தாலும் பார்வைல மட்டும் பேசிகிட்டாக இந்த ஜோடி. மோர்க்காரி, பால்காரர் வார நேரம் பாத்து பய மூனாந்த்தெருவுல நிப்பாப்டி. தரிசனம் கெடைக்கற அன்னிக்கு பயலுக்கு கொண்டாட்டம். செத்த நாள்ல வந்துச்சு மாரியம்மன் சித்திரை திருவிழா. ஊருக்குள்ள சிறுசும் பெருசும் கொண்டாட்டமாச்சு. பெருசுங்க தண்ணில மெதக்க சிறுசுங்க அதுங்க ஆளுங்கள தொரத்த இப்படி களகட்டுச்சு திருவிழா.
பண்டிக நாலாநாள் மஞ்சத்தண்ணி, ஊர்ப்பசங்க மேல புள்ளைங்க த்தண்ணி ஊத்தி சேதி சொல்ற நாள். கொஞ்சம் வெட்கம் விட்டு கதையோட அம்மணி நம்ப ஹீரோவா தொரத்த, ஓடிபோய் மறஞ்சுக்க பாத்தான் ஆத்தா பின்னாடி. இத்தனையும் பாத்தா ஆத்தா செல்லமா கோவபட்டுச்சு. "சித்தப்ப மக பெரியப்ப மவ அண்ண மேல தண்ணி ஊத்தக்கூடாது, உம்மாம மவ மேல போயி ஊத்து புள்ள" வெளயாட்ட சொன்ன பேச்சுல இருந்த உண்ம சாட்ட அடியா விழுந்துச்சு. பேசிக்கிட்டு இருக்கும் பொது ஒரு வாளி மஞ்சத்தண்ணி விழுந்தது கனகு மேல. ஊத்தினது அவன் மாமன்மக!!!

Thursday, January 27, 2011

சனிப்பொணம்..

பெரியவர் அவர், வயது அறுபத்திரண்டு.1960'களில் ஊர் விட்டு ஊர் வந்து கலப்பு திருமணம் செய்து கொண்ட சிலதுகளில் அவரும் ஒருவர். தனக்கு துணையாய் வந்த உறவு மட்டும் போதுமென்று அந்த நகரத்திலயே தங்கிவிட்டார். வேலை, மகன், சொந்த வீடு இப்படி மகிழ்ச்சியின் ஊற்றுகள் திறக்க, அமைதியாய் உருண்டது காலம். பின்னிரவில் நடந்த விபத்தொன்றில் மகனை தொலைத்துவிட்டு திரும்பவும் இரு மரமாய் நின்றனர் அவர்களிருவரும். மெதுவாய் உருள்வதை நிறுத்திக்கொள்ளவில்லை காலம். வேலை, மனைவி, இவை எல்லாம் பறிகொடுத்து போக மீதமிருந்தது அவரும், வீடும். வெள்ளிமுட்டையிடும் வாத்தாய் இருந்தது வீடு. முன்பக்கத்தை வாடகைக்கு விட்ட வகையில் வரும் வரும்படியோண்ட்ரே நிதிஆதரமாய் இருந்தது.

ஒரு மாரிக்காலத்தின் தொடக்கத்தில் குடியிருந்த தம்பதியரில், கணவன் இல்லாத சனிக்கிழமை பொழுதொன்றில் பெண்மணி நடு வீட்டில் தொங்கினாள். வீட்டின் முதலாளி என்ற முறையில் சாட்சியம் கூற, விசாரணை செய்ய அழைத்து சென்றனர் பெரியவரை. காக்கிசட்டைகளின் வாசனை, பூட்ஸ்களின் சத்தம், கேளா வசைமொழிகள், வித்தியாசமான ஓலங்கள்.. இவை எல்லாம் வாடிக்கை ஆயின சில நாட்களுக்கு. விசாரணை என்ற பெயரில் வீட்டிலும் காக்கி சட்டை வாசனை, பூட்ஸ்களின் சத்தம். வீட்டில் விசாரணைகளை நிறுத்த கொடுத்த லஞ்சம், வரும்படியில்லா செலவுகள் இப்படி
மெதுவாய் கரைய ஆரம்பித்தது கையிருப்பு.

மெதுவாய் ஒரு பூதம் ஒன்று உறங்கிக்கொண்டிருந்தது வீட்டினுள்ளே. அது யாரையும் குடி வர விடவில்லை. அந்த பூதம் பேசும் பல குரல்களில், ஆனால் உருவம் கிடையாது. ஒற்றை வரும்படி ஆதாரமும் நின்று போக, அவரின் அன்றாட தேவைகளின் ஓலங்கள் காதில் விழவேயில்லை அந்த பூதத்திற்கு. கடனாய் கொடுக்கவும் யோசனை பலருக்கு. பிற்பகல் ஒன்றில் விட்டதை பார்த்துகொண்டு இருந்தார், மெதுவாய் எழுந்து தள்ளாடி நடக்க ஆரம்பித்தார் கடை ஒன்றிற்கு. வீட்டின் வெளியே பூதம் சொல்லிக்கொண்டு இருந்தது, "அந்த வீட்டுல அந்த பொண்ணோட ஆவி இருக்கும்பா".


"என்ன வேணும் பெரியவரே? ஆறடிக்கு கயிறு குடுப்பா."